முதலாவது காதலி’
தலைப்பைக் கண்டு உஷாராகிவிட்டீர்கள் போலும். ‘முதலாவது காதலி’ என்றால் அப்போ, உதய தாரகை உங்களுக்கு இரண்டாவது மூன்றாவது என்று பல காதலிகள் உண்டா என்றல்லவா நீங்கள் கேட்கத்துடிக்கிறீர்கள். எப்படிங்க உங்களால மட்டும் இப்படியெல்லாம் வயலண்டா யோசிக்க முடியுது…? (இருக்கோட்டும்.. இருக்கோட்டும்…)
என்ன உதய தாரகை! ஒரே காதலி பேச்சாக்கிடக்குது.. என்ன விசயம் என்றுதானே கேட்கிறீங்க…? எல்லாவற்றையும் தெளிவாக உங்களுடன் பகிர்ந்து கொள்ளப் போகிறேன். இப்போது உங்களுடன்… இன்னொரு பிரபஞ்சம் என்ற தொடரின் மூலம் ‘யாரும் பார்க்காத உதய தாரகையின் வானம்’ என்ற அடிக்குறிப்போடு உங்களைச் சந்தித்த நான், அத்தொடரில் தொடர்பதிவுகளை இட முடியாமல் போனது பற்றி எனக்கும் கவலைதான். என்ன செய்ய… ஒன்றா.. இரண்டா.. பல மாதங்கள் தொடரிலமைந்த எந்தப் பதிவையும் பிரசுரிக்க முடியவில்லை. கொஞ்சம் வேலைப்பளு கூடியதால் முறையாக இன்னொரு பிரபஞ்சத்தை சமைக்க முடியவில்லை. (பார்ரா… பிரபஞ்சத்தை சமைக்கப் போறாராம்.. ரொம்ப நக்கலாப் போச்சு…)
இதோ இன்னொரு பிரபஞ்சத்தின் மூன்றாவது பதிவு விரிகின்றது. உலகில் உணர்வுகளின் பிடிப்பில் அகப்பட்டு, தன்னையே இழக்காத சந்தர்ப்பங்களைக் கொண்டிருக்கும் மனிதர்களைக் காண்பது அரிது. உணர்வுகளுக்கு அத்தனை சக்தியுண்டு. உணர்வுகளின் மிக உன்னதமானது அன்பு என்றால் நீங்கள் மறுக்கமாட்டீர்கள் என நம்புகிறேன். உணர்வுகளின் மூச்சாய் அமைந்திருப்பதுவும் அதுவே. கோபம் என்பது உணர்வு என்றால் அதை தணிக்கக்கூடிய உணர்வு அன்புதான். இப்படி எந்த உணர்வாக இருந்த போதிலும் அவற்றை அந்நிலையிலிருந்து தம் நிலையாம் அன்பே உருவாய் அமைந்த நிலைக்குக் கொண்டு வருவது அன்பு என்ற உணர்வு ஒன்றேதான். (போதும்! போதும்! அன்புக்கு மார்க்கடிங் எக்ஸகடிவ் வேலை பார்க்கிறீங்களா உதய தாரகை?)
அன்பின் ஆரம்பத்தில் தான் அனைத்து உணர்வுகளும் அடங்குகின்றது. காதலும் அப்படித்தான். அன்பின் தீவிரம் தான் காதலாக வேண்டும். எனக்கின்னும் ஞாபகமிருக்கிறது, நான் எனது கிராமப் பாடசாலையிலிருந்து புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியெய்து, தலைநகரத்தின் பிரபல பாடசாலைக்கு கல்வி கற்க வந்த காலம்! ஆஹா… அந்த நேரம் நான் வடித்த கண்ணீரை சேகரித்திருந்தால் வறட்சிக் காலங்களில் மின்சார துண்டிப்புக்களே நடத்தியிருக்கத் தேவையில்லை. சின்ன வயசில் (அது சின்ன வயசா?) உறவுகளைப் பிரிந்து வருகின்ற ஏக்கம்! வந்ததால் ஏற்பட்ட தாக்கம்!
நான் வீட்டிற்கு கடிதம் எழுத காகிதத்தை எடுத்தால் என் கண்களே முந்திக் கொண்டு காகிதத்தில் சித்திரம் வரைந்து கொள்ளும். காகிதத்தில் நானெழுதும் பேனா மையை, கண்ணீர் வர்ணச் சித்திரமாய் மாற்றியமைக்கும். பெற்றோரை, உற்றாரை பிரிந்து வந்த கவலையின் வெளிப்பாடுதான் அது! ஆனால், அந்தக் கவலை என்ற உணர்வு என்னைப் பல மாதங்கள் காதலித்தது தவிர்க்க முடியாத உணர்வுப் பகிர்வுதான். அப்போ உங்க முதலாவது காதலி கவலை என்றுதான் சொல்ல வர்ரீங்களா? என்று நீங்கள் கேட்க நினைப்பது போல் எனக்குத் தோனுகிறது. அவசரப்படப்படாது. கவலையைப் போய் எனது காதலி என்பேனா..? சொல்லுங்க.. நீங்களே சொல்லுங்க பார்க்கலாம்…
தலைநகரத்து பாடசாலையில் கற்ற நாட்களில் நான் சந்தித்த பாத்திரங்கள் எண்ணிலடங்காதவை தாம். அங்கே சந்தித்த ஒவ்வொரு பாத்திரங்களைப் பற்றியும் பொருத்தமான நேரங்களில் பொருத்தமான சம்பவங்களினூடாக உங்களிடம் பிரிதொரு பதிவில் பகிர்ந்து கொள்வேன். இந்தப் பதிவில் எனது முதலாவது காதலியைப் பற்றி நான் உங்களுடன் பகிர்ந்து கொள்ளப் போகிறேன்.
நான் கற்றது ஆண்கள் பாடசாலையில் தான். எனது சகபாடி ஒருவன் அவனது தோழியைப் பற்றி தினமும் இடைவேளை நேரத்தில் வர்ணித்துக் கொண்டேயிருப்பான். அவன் வர்ணிப்புகளின் நான் புதைந்து போவேன். அந்த வர்ணிப்புகளில் அன்பு என்ற நிலையைத் தாண்டி தயவு, கீழ்படிவு, புத்திக்கூர்மை என்ற பண்புகளெல்லாம் குறித்த பெண்ணின் வழியே தொடர்ந்து மிளிரக் காண்பேன்.
அடப்பாவி.. அந்தச் சின்ன வயசிலேயே உனக்கு காதல் கத்தரிக்காய் எல்லாம் வந்துவிட்டதா? என்றல்லவா நீங்கள் கேட்கிறீர்கள்? வேணாம் சார். அப்படியெல்லாம் சொல்லப்படாது. எல்லாம் ஒரு பீலிங்ஸ்தான். (ஆனாலும், நீங்க எடுத்த வாக்கிலேயே இப்படியொரு கேள்வி கேட்டிருக்கக்கூடாது..) சரி.. சரி.. மேட்டருக்கு வர்ரேன்…
என் நண்பனின் வர்ணிப்புகளில் அவள் பற்றிய எனது கனவுகள் வானளாவப் பரந்து விரிந்தன. நண்பனின் வர்ணிப்புகளில் என்னைத் தொலைத்தேன். அவளின் குணங்களைக் கண்டு வியந்தேன். அக்குணங்களை அவள் வெளிப்படுத்தும் தருணத்தில் நானும் அவள் முன்னால் இருக்க வேண்டுமென்று கற்பனைக் கோட்டை கட்டினேன். நண்பன் வர்ணிப்புகளில், அவளின் கருமங்களில் என்றுமே பிழை இருந்ததில்லை என்றே சொல்லுவான். உண்மையைச் சொல்லப் போனால், நான் அவளின் குணங்களில் என்னைத் தொலைத்தேன். அவள் போன்ற ஒருவளை நானும் தோழியாகப் பெற வேண்டுமென ஆர்வங் கொண்டேன். (இதெல்லாம் ரொம்ப ஓவர் உதய தாரகை!)
நாட்கள் நகர்ந்தன. தலைநகரத்திலிருந்து மீண்டும் கிராமத்திற்கு செல்ல வேண்டியதாயிற்று. ஆனாலும், என் நெஞ்சக்கூட்டின் நினைவுகளுக்குள் எல்லாம் அவள் செயல்கள்தான் நிரம்பி வழிந்தன. என் எண்ணங்கள் கூட, அவள் அதைச் செய்வாளா? இதைச் செய்வாளா? அப்படிச் செய்வாளா? இப்படிச் செய்வாளா? என்றெல்லாம் தங்களுக்குள்ளேயே பட்டிமன்றம் நடத்திக் கொண்டன. இப்படியாக எண்ணங்களையே கொள்ளை கொண்டவளாய் எனக்குள்ளேயே குடியிருந்தாள் அவள்.
கிராமத்து பாடசாலையில் நான். அது இன்னொரு இடைவேளை நேரம். கிராமத்துப் பாடசாலையில் ஆராதனை மண்டபத்தின் அருகால் நான் நடந்து செல்லுகையில், அம்மண்டபத்தின் அருகேயுள்ள கட்டிடத்தின் கண்ணாடிக் கதவு வழியாக ஒரு அதிசயம் கண்டேன். அது என் நண்பன் வர்ணித்த அவளே என்பேன். என்னால் நம்ப முடியவில்லை. ஆனாலும், உண்மையாக அவளேதான் அக்கட்டடத்திற்குள் அடக்கமாக இருந்து கொண்டிருந்தாள். வாழ்க்கையில் நாம் எதை அடைய வேண்டுமென ஆர்வம் கொள்கிறோமோ, மனப்பூர்வமாக விரும்புகிறோமோ அது எமக்கு எப்போதாவது கிடைக்குமென்பது திண்ணமென்பதை எனக்குணர்த்திய இன்னொரு சம்பவம் இது!
என் மனவானில் சிறகடித்துப் பறந்து அவளை கண்டதிலிருந்து எனக்கு ஒரே புளகாங்கிதம் தான். நாம் எதிர்பார்க்கும் எல்லாமும் எப்போதும் எமக்குக் கிடைப்பதில்லை. ஆனால் ஒருவேளையில் நாம் எதிர்பார்த்திருந்த எதுவும் கிடைக்கப் பெறும் போது, எமக்கு ஏற்படும் சந்தோசம் இருக்கிறதே சொல்லி விளக்கி விட முடியாது! அனுபவித்துப் பார்க்க வேண்டும்! (உங்கள் நினைவுகள் உங்களின் எதிர்பார்ப்புகள் ஈடேறிய தருணங்களைச் சுற்றிக் கொண்டு ஓடுகிறதல்லவா? ஆமாம். அந்த நினைவுகளில் கொஞ்சம் வாழ்ந்து பாருங்கள்… எத்துணை சுகம்… எத்துணை இனிமை…)
எனது பாடசாலையில் அவளைக் கண்ட நாளிலிருந்து எனக்கு அவளோடு தோழமை கொள்ள வேண்டுமென்ற ஆசைதான்! என்ன செய்ய… யார்தான் இதற்கு உதவப் போகிறார்கள்…?
ஆனாலும், அவள் முன்னிருந்து நான் சொல்வதை அவள் செய்யும் அழகை ரசிக்க வேண்டும். அதில் நான் வியந்து போக வேண்டும் என்ற கனவுகளெல்லாம் கட்டாயம் நிறைவேறும் என்று உறுதியாக நான் நம்பியிருந்தேன். நம்பினார் கைவிடப்படுவாரா..? இல்லையே..
அவளின் முன்னிருந்து அவளோடு நேரடியாகப் பழகும் வாய்ப்பையும் பெற்றுக் கொண்டேன். ஆனந்தமேயுருவாய் அவளருகே சென்றேன். (போதும்! போதும்..! எங்களுக்குப் பொறாமையாய் இருக்க….)
என்ன அதிசயம்! என் தலைநகரத்து பாடசாலையில் எனது நண்பன் வர்ணித்தவள் தானோ இவளென்று சந்தேகமெழுமளவில் அவள் ஒவ்வொரு அசைவும், நடவடிக்கையும் அமைந்திருந்தது. தினமும் அவளைச் சந்திக்க நான் திட்டமிட்டுக் கொண்டேன் (எல்லாம் பிளான் பண்ணித்தான் செய்வீங்களோ?). அவள் முன்னிருந்து அவள் செயல்களிலேயே வியந்து போக என்னை நான் தினமும் கண்டேன். அவளின் நடவடிக்கைகளை எப்படிச் சொல்வேன். அவளுக்கு நன்றாகப் பாடக்கூடத் தெரியும். நான் விரும்பும் பாடல்களை மட்டுமே மிகவும் இனிமையாகப் பாடுவாள். அவள் பாடல்களில் மெய்மறந்து திழைக்கலாம்.
அவள் அனைவருடனும் மிகவும் சரளமாகவும் இனிமையாகவும் பழகுவாள். ஆனால் அப்போது, அவளை ஒரு சிலரால் புரிந்து கொள்ளவும் முடியவில்லை. அவள் சர்வகலையிலும் பாண்டித்தியம் பெற்றவளோ என்றே நான் சில வேளை எண்ணுவதுண்டு. அவளுக்கு அத்துணை அறிவு.. விவேகம்…! அந்தக் காலத்தில் அவளை விட அறிவுடையவர் யாருமிருந்திருக்க முடியாதென்றே என்னால் சொல்ல முடியும் (இதெல்லாம் ரொம்ப அதிகமான பில்ட் அப்). இத்தணைக்கும் எனக்கு அப்போது வயது வெறும் பதினான்கு மட்டுந்தான். (ரொம்ப குசும்புதான் உதய தாரகை!)
அவள் என்னைக் காதலித்தாலோ இல்லையோ நான் அவளைத் தீவிரமாகவே காதலித்தேன். ஆனால், காலச் சக்கரத்தின் சுழற்சியில் நாம் எதிர்பார்க்காத விடயங்கள் கூட வாழ்க்கையோட்டத்தில் எமக்கு இடம்பெறுவது தவிர்க்க முடியாததே! அப்படித்தான் அவளையும் நான் பிரிய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது!
அவளின் பெற்றோரோ உற்றாரோ அவளைக் கண்டிக்கவில்லை. அவளுடலில் ஏற்பட்ட திடீர் நோயின் காரணமாக, அவள் சிகி;ச்சை பெறுவதற்காக கிராமம் விட்டு தலைநகருக்கு செல்ல வேண்டிய கட்டாயம் அவளுக்கு ஏற்பட்டது. ஆனாலும் அவள் சிகிச்சைக்காக சென்ற இடத்தையோ, அவளுக்கு ஏற்பட்ட நோயையோ நானறியேன்! அவள் மீது நான் கொண்டிருந்த காதல் என்னை அப்படிச் செய்ய வைத்திருக்கக்கூடாது. ஆனாலும், பிறகு அவளை நான் எனது பாடசாலையில் காணவேயில்லை. விசாரித்துப் பார்த்த போது சொன்னார்கள்: அவளுக்கு என் கிராமத்திற்கு வர இஸ்டமில்லையாம் என்று. அவள் என்னை ஏமாற்றினாளா? அல்லது நான் தான் அவளால் ஏமாந்தேனா? ஏமாற்றம் என்ற உணர்வின் தோற்றம் இங்கு தேவைதானா? என்றெல்லாம் எனக்குள்ளேயே ஆயிரம் கேள்விகள். (என்ன உதய தாரகை நீங்க லவ் ப்ரேக் என்று எங்களுக்குச் சொல்லவேயில்லை…?)
இன்றும் அவள் நினைவுகளோடே நானும் இருக்கிறேன். அதனால் தான் இன்று உங்களோடு அவள் நினைவுகளை பதிவாக்கி உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன். ஆனாலும் அவளைப் போன்ற பலரை இதுவரை சந்தித்திருக்கிறேன். அவளை விட விவேகமுடையவர்களைக் கூட சந்திந்திருக்கிறேன். அவர்களுடன் பழகியிருக்கிறேன். ஆனாலும், நான் முதலாவதாகக் காதலித்த அவளை என்னால் மறக்க முடியவில்லை.
என்ன உதய தாரகை! அவள், அவள் என்று சொல்லிக் கொண்டேயிருக்கீங்க… உங்களின் முதலாவது காதலியின் பெயரைக் கொஞ்சம் எங்களிடம் சொல்லக்கூடாதா? என்று நீங்கள் கேட்பது போல் எனக்குத் தோனுகிறது.
நான் அவளை செல்லமாக, போ எயிட் சிக்ஸ் [Four Eight Six] என்றே அழைப்பேன். பொதுவாக அவளை எல்லோரும் கம்பியூட்டர் என்றே அழைப்பர். என்னது கம்பியூட்டரா?!! அப்போ நீங்க இவ்வளவு நேரமும் அவள் என்று சொன்னது கம்பியூட்டரைப் பற்றியா? புரிஞ்சிக்கிட்டாச் சரிதான்.. உதய தாரகை எங்களைக் கவுத்துப் போட்டியப்பா…ரொம்ப நக்கலாப் போச்சு…
இப்போது ‘அவள்’ என்று இக்கட்டுரையில் வரும் இடங்களில் ‘கம்பியூட்டர்’ என்பதைப் பிரதியிட்டு வாசித்துப் பாருங்கள். கம்பியூட்டரில் நான் கொண்டிருந்த ஆர்வத்தை காதலாய் உருவகித்து, அதில் காதலியாய் கம்பியூட்டரை ஆக்கி உங்களோடு எனது அனுபவத்தைப் பகிர்ந்து கொண்டேன். கொஞ்சம் வித்தியாசமான வில்லங்கத்தனமான முயற்சிதான்!
நீங்களும் சில விடயங்களின் மீது அதிக ஆர்வம் கொண்டிருப்பீர்கள். அதுபற்றி நிறத்தோடு பகிர்ந்து கொள்ளுங்களேன். அனுபவங்களை அனுபவித்து ஆனந்தம் காண்போமா?
இன்னொரு பிரபஞ்சத்தின் இன்னொரு பதிவுடன் உங்களைச் சந்திக்கும் ஆர்வத்துடன் காத்திருக்கிறேன்.
By .
M.MD.RAFEEK,THIRUPOONDI
..................................................................................
ரோசாவைக் கிள்ளாதே!
அது நான் விடுதியில் படித்துக் கொண்டிருந்த காலமது. ஓரிரவு. எனது விடுதி பொறுப்பாளரின் அறிவித்தல் சத்தம் தவிர்ந்த ஏனைய எந்தச் சத்தமுமில்லாத மயான அமைதி நிலவிய பொழுது. இடம் விடுதிக் காரியாலயத்தின் முற்றம். அழகிய பூமரங்களின் இன்னொரு வனாந்தரம் அது (இதெல்லாம் ரொம்ப ஓவரா தோனலையா உதய தாரகை!??).
பொறுப்பாளரின் அறிவிப்புகளை அனைவரும் உன்னிப்பாகக் கவனித்துக் கொண்டிருந்த வேளை, என் பக்கத்தில் நின்று கொண்டிருந்த என் நண்பணொருவன் தனக்கு முன்னால் நின்று கொண்டிருந்த ரோசா செடியின் மலரை கொய்ய முற்பட்டான்.
அந்நேரம் பொறுப்பாசிரியர் அவனை நோக்கி, “ரோசாவைக் கிள்ளாதே!” என்ற கம்பீரக் குரலில் ஆணையிட்டார். அங்கு கூடியிருந்த மாணவர்கள் அனைவரும் சிரித்துவிட்டோம் (இந்தச் சிரிப்பு தோன்ற அந்நிகழ்வு இடம்பெற்ற தருணம் அப்படியாகவிருந்தது.. இருக்கோட்டும்.. இருக்கோட்டும்.. ஏதோ ஒன்ற சொல்ல வர்ரது பின்னர் இப்படி Explanation வேற கொடுக்கிறது. தாங்க முடியல உதய தாரகை..!). விசயத்திற்கு வருகிறேன்.
ஒருவர் ரோசா செடியொன்றை நட்டு, அதற்கு அன்பாய் நீருற்றி பராமரித்து வந்தார். அந்த ரோசா செடி பூப்பதற்கு முன்பாக அதனை ஒரு தரம் நோட்டமிட்டார்.
அங்கே மிக சீக்கிரமாகவே பூக்கும் நிலையிலிருந்த மொட்டையும், தண்டு வழியே பரந்து கிடந்த முட்களையும் கண்டார். “என்ன கொடுமை இது, கூரிய முட்கள் நிறைந்த ஒரு தாவரம் எங்கே, எப்படி அழகிய பூவைத் தரப்போகிறது?” என்று தனக்குள்ளேயே எண்ணிக் கொண்டார்.
தனது எண்ணத்தால் கவலை கொண்ட அவர், பூச்செடிக்கு நீருற்றாமல் விட்டுவிட்டார். பூக்கவிருந்த மொட்டு இறந்து சருகானது.
நாமும் இப்படித்தான். ஒவ்வொரு ஆத்மாவினுள்ளும் அழகிய ரோசாவொன்று உள்ளது. அன்பான அழகிய பண்புகள் நாம் பிறக்கும் போது, எம்மோடு கூடவே சேர்ந்தே வருகின்றது. வளரும் போது, எமது பிழைகள் முட்களாக எம்மோடு தோற்றம் கொள்கிறது. அதிகமானோர் முட்களுக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை ரோசா மலருக்குத் தர மறந்து விடுகிறோம்.
எம்மிடமிருந்து எப்படி நல்ல விடயங்கள் வெளிப்படலாம்? என்ற சந்தேகம் கொண்டவர்களின் நிலை பரிதாபமானதே. தம்மிடமுள்ள நல்ல விடயங்களை போசிக்காமல் விட்டுவிடுவதால், அந்த நல்ல குணங்கள் அவர்களிடம் இருந்து பிரிந்து விடுகிறது. தமது உள்ளார்த்தமான ஆளுமையை அறிய முடியாமலே வாழ்க்கையில் தலைவிதியை தொலைத்து விடுகின்றனர்.
எமக்குள்ளே இருக்கும் அழகிய ரோசாப் பூவை இன்னொருவர் இனங்காட்டும் நிலையும் உள்ளது. ஒரு மனிதனின் முட்களான விடயங்களைக் கடந்து அவனில் ரோசாவைக் காணும் ஆற்றல் தான் நாம் ‘அவனியில்’ பெறும் உயர்ந்த அருட்கொடை என நான் சொல்வேன்.
காதலின் அத்தியாவசிய கூறும் இது தான். அன்பின் ஊற்றும் இது தான். ஒருவரைக் கண்டு, அவரின் மெய்யான தவறுகளைக் கூடக் கண்டு, அவரை மனதார ஏற்றுக் கொள்ளும் பண்பு உன்னதமானது. அவர்களின் எண்ணங்களுக்குள் அவர்களின் ரோசா போன்ற தன்மையைக் காட்டிக் கொடுக்கும் வழி தான் அது.
மற்றவர்கள் தங்களுக்குள்ளே கொண்டிருக்கும் ரோசாவைக் போன்ற குணங்களை அவர்களுக்கு நாம் இனங் காட்டிக் கொடுத்தால் அவர்கள் முட்களை பார்ப்பதற்கு விரும்பவே மாட்டார்கள். கனியிருக்க யார்தான் காய் கவருவார்? ரோசாவாய் யாவரும் மலர்கவே!
என்னை மறந்துவிடாதே!
ரோசா மலரைப் பற்றிக் கதைக்கும் போது, எனக்கு மலர்கள் பற்றிய ஞாபகமொன்று அலை பாய்கிறது. மலர்களின் பெயர்களில் அற்புதங்கள் பலவுண்டு. ”என்னை மறந்துவிடாதே!” என்ற பெயரில் ஒரு மலருள்ளது உங்களுக்குத் தெரியுமா?
Forget-me-not என்று ஆங்கிலத்தில் வழங்கப்படும் இப்பூவிற்கு எப்படி பெயர்வந்தது என்பதில் பல கதைகள் உண்டு. அனைத்தும் சுவாரஸ்யமானவை. அறிந்து கொள்ள நீங்கள் தயாரா? (நாங்க ரெடி இல்ல என்டு சொன்னா மட்டும் நீங்க என்ன சொல்லாமலா போய்விடுவீங்க..? உதய தாரகை..)
சுந்தரமான பூக்களின் சோலையை விட்டு அகன்று விட்டுச் சென்ற ஆதாமையும் ஏவாளையும் நோக்கி அங்கு செடியில் பூத்துக் குலுங்கிய பூ சொன்னதாம் ”என்னை மறந்துவிடாதே!” என்று. அதுவே பெயராயிற்றாம்.
இறைவன் பூச்செடிகள் யாவற்றையும் பெயரிட்டுக் கொண்டிருக்கும் வேளையில், ஓரமாய் இருந்த சிறிய பூச்செடியொன்று, “இறைவா! என்னை மறந்து விடாதே!” என்று கேட்டுக் கொண்டதாம். அதற்கு இறைவன், “அதுவே உன் பெயராகட்டும்” என பதில் சொன்னானாம். அதுவே பெயராயிற்றாம்.
தலைவனும் தலைவியும் ஆற்றின் ஓரமாக நடந்து சென்று கொண்டிருந்தார்கள். நடக்கும் வழியில் பூக்கள் சிலவற்றைக் கொய்து தன் கையில் வைத்துக் கொண்டான் தலைவன். தலைவனின் அணிகலன்களின் பாரத்தினால், ஆற்றினுள்ளே அவன் தவறி விழுந்து விட்டானாம். தான் ஆற்றில் மூழ்கிக் கொண்டிருக்கும் நிலையில் தன் கையிலிருந்த பூக்களை தலைவியை நோக்கி வீசி, “Forget Me Not” என சத்தமிட்டு கத்தியிருக்கிறான். அதுவே அப்பூவின் பெயரானது.
காதலின் உணர்விற்கும் சோகமான விதியான காதலின் கதைக்கும் இப்பூவுக்கும் நிறைய தொடர்புகள் உள்ளன. அதனாலென்னவோ தெரியவில்லை, இந்த மலர் பல பெண்களினால், இன்னமும் நம்பிக்கையை மற்றும் நீடித்த காதல் என்பவற்றை வெளிக்காட்டும் அடையாளமாகக் கூட அணிந்து கொள்ளப்படுகிறது. திருமணங்களில் பல பேர், இப்பூவை காதலின் சின்னமாக பயன்படுத்துவதும் காணக்கிடைக்கிறது.
பதினைந்தாம் நூற்றாண்டில், இந்தப்பூவை அணிந்து கொள்பவர்கள் அவர்களின் காதலர்களால் ஒருபோதும் மறக்கப்பட மாட்டார்கள் என் ஐதீகம் வேறு இருந்ததாம். பூ அழகு.
மலர்களின் வாசமும் மலர்களின் நிறமும் மலர்களின் மெளனமும் பொதிந்த எந்தப் பொருளையும் உலகில் சமைத்துவிட முடியாது. மலர்களே மலருக்கு நிகர்.
காதலை அறிவிக்கும் சின்னமாகக் கூட இன்று ரோசா மலர் இன்றும் பாவிக்கப்படுவது அறிந்ததே! மலர்கள் மொழிகடந்து உணர்வுகளுக்குள் ஒரு நிலையானது அதிசயமே
பார்த்தேன் இரசித்தேன்
BYYYYY.
J.AFRIDI ALI,J.NASRIN BANU ,S.AMEERA BROUZI,A.SAFEERUL HASSAN
<
Tuesday, 8 September 2009
Subscribe to:
Posts (Atom)